விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அமைச்சர் முருகன் தகவல்

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த தேசிய இ- விதான் செயலி துவக்க விழாவில், மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:

பிரதமர் மோடியின் ஆட்சியில், நாடு வேகமாக வளர்ந்துள்ளது.

பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களால் கடந்த 10 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமைகோட்டில் இருந்து மேலே உயர்த்தி உள்ளோம்.

பிரதமர் மோடி தைரியமாக கொண்டு வந்த டிஜிட்டல் பரிவர்த்தனை, இன்று குக்கிராமங்களிலும் நடக்கிறது. இதனால், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.

பொருளாதாரத்தில் கடந்தண்டு 5 இடத்தில் இருந்தோம். இந்தாண்டு 4ம் இடம். வரும் 2027ல் மூன்றாம் இடம். 2047 ல் மிக பெரிய வல்லரசு நாடாக இந்தியா இருக்கும்.

பயங்காரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவான பாகிஸ்தானுக்கும் எதிரான ஆபரேஷன் செந்துாரை நம் நாட்டில் இருந்தபடியே, அவர்களின் எல்லைக்கு செல்லாமல், 100 கி.மீ., தாண்டி, தீவிரவாதிகளின் முகாம்களை தகர்த்தோம் என்றால், நாம் நாட்டின் தொழில்நுட்பம் அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது.

ராணுவ தளவாடங்கள் கடந்த காலங்களில் இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். பிரதமர் மோடி வந்த பின் தற்போது ஆண்டிற்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்கிறோம்.

அதன் தொடர்ச்சியாகவே தேசிய இ-விதான் செயலி திட்டம். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது.

தற்போது எம்.பி. எம்.எல்.ஏ.,க்களுக்காக ஒரே நாடு ஒரே அப்ளிகேஷன் திட்டத்திற்காக இ-விதான் செயலி கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம் எம்.எல்.ஏ.,க்கள் கேள்விகளை சட்டசபை செயலகத்திற்கு உடனடியாக அனுப்ப முடியும். சட்டசபையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தேசிய இ-விதான் செயலி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் நேர விரயத்தை தவிர்ப்பதுடன், சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் முருகன் பேசினார்.

Advertisement