முண்டந்துறையில் மரங்களை வெட்டி சாலை அமைப்பு; புலிகள் காப்பகத்தில் வனத்துறை செயலால் அதிர்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் தெற்கே களக்காடு முதல் வடக்கே முண்டந்துறை வரை புலிகள் காப்பகம் செயல்படுகிறது. இங்கு சேர்வலாறு அணை அருகில் குடமாடியில் இருந்து, 15 கி.மீ., துாரம் வனம் வழியாக வாழையார் வரை செல்லும் தடம் உள்ளது.

சில தினங்களாக வாழையார் பகுதியில் வனத்துறையினர் இயந்திரங்களை கொண்டு மரங்களை வெட்டி வருகின்றனர். குடமாடியில் இருந்து வாழையார் வரை, 15 கி.மீ.,க்கு ஜீப், வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலா திட்டம்



இதன் வாயிலாக வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் சுற்றுலா நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், மரங்கள் கடத்தல் எளிதாகிவிடும்.

வனத்துறையினர் மட்டுமின்றி, ஏற்கனவே மரம் கடத்தலில் ஈடுபட்டதற்காக வழக்கும், அபராதமும் விதிக்கப்பட்ட சில நபர்களும் தற்போது மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை, வனப்பகுதிக்குள் அதிகாரிகள் அனுமதித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக, புலிகள் காப்பக வனப்பகுதியில் மரங்களை வெட்ட அனுமதி கிடையாது. அங்கு சாலை அமைப்பது புதிய கட்டடங்கள் கட்டுவது, மரங்கள் வெட்டுவது என அனைத்திற்கும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.

கட்டளைமலை எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் காய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துகிறோம் என, வன அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, தற்போது வெட்டி போடப்படும் மரங்களையும் அவர்கள் கடத்துவர் என்பது வன ஆர்வலர்களின் புகாராக உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் சுகுமார் உத்தரவில் முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா விசாரித்தார்.

அவர் கூறியதாவது:

குடமாடியில் இருந்து வாழையார் வரை ஜீப் செல்வதற்காக மரங்களை அப்புறப்படுத்தி சாலை அமைத்து வருகிறோம். இதற்காக களக்காடு -முண்டந்துறை பவுண்டேஷன் நிதியிலிருந்து, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கலெக்டரிடம் அனுமதி



மரங்கள் வெட்டுவதற்கு ஒவ்வொரு முறையும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தில் அனுமதி பெற முடியாது. ஏற்கனவே முண்டந்துறை பகுதி புனரமைப்பு பணிகளுக்காக பெறப்பட்ட அனுமதியை பயன்படுத்தி இதை செய்கிறோம். இதில், மரம் கடத்தலில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்த நபர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் வெளியேற்றப்படுவர். இங்கு வெட்டப்படும் மரங்களை வெளியே கொண்டு செல்ல மாட்டோம்.

கட்டளைமலை எஸ்டேட் பகுதியில் மரம் வெட்டுவது, கலெக்டரிடம் அனுமதி பெற்று மேற்கொள்ளும் தனியார் பணி. அதற்கும், வனத்துறைக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் வனத்துறையினர் வெட்டிய மரங்களை கடத்த வாய்ப்பில்லை.

புதிய சாலை அமைத்தாலும் அதை சுற்றுலாவுக்காக பயன்படுத்த மாட்டோம். களக்காடு -முண்டந்துறையில், 25 சதவீத பகுதி சுற்றுலாவுக்கு பயன்படுத்தலாம் என அனுமதி இருப்பினும் கூட, நாங்கள் வெறும் 4 சதவீதம் மட்டுமே மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி பகுதியில் சுற்றுலாவிற்கு அனுமதிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய புலிகள் காப்பக ஆணையம் எப்போதோ அளித்த ஒரு அனுமதியை வைத்துக்கொண்டு, மரங்களை வெட்டி சாலை அமைப்பதும் சட்டவிரோதம் என்கின்றனர் வன ஆர்வலர்கள்.

Advertisement