விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பாதிரியார்கள்; முறியடிக்க தி.மு.க.,வும் எதிர் பிரசாரம்

கிறிஸ்தவ வன்னியர்களை, எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை, தி.மு.க., அரசு நிறைவேற்றாததால், அவர்களின் ஓட்டுக்களை, விஜய் கட்சிக்கு திருப்பி விடும் திட்டத்தில், சில கத்தோலிக்க பாதிரியார்கள் களமிறங்கி உள்ளனர். அதை முறியடிக்க, தி.மு.க., தரப்பும் எதிர்பிரசாரத்தில் இறங்கி உள்ளது.
வன்னியர் சமுதாயத்தினர், எம்.பி.சி., எனும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தாலும், அதில் கிறிஸ்தவ மதத்தை தழுவியர்கள் என்பதால், சட்டரீதியில் அவர்களை அந்த பட்டியலில் சேர்க்க முடியாது. அதன் காரணமாக, இடஒதுக்கீடு உள்ளிட்ட பலன்களை, அவர்களால் பெற முடியவில்லை.
எனவே, கிறிஸ்தவ வன்னியர்கள், தங்களையும் எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். அதை ஏற்ற தி.மு.க., தலைமை, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக, 2021ம் ஆண்டு தேர்தலின்போது உறுதி அளித்தது.
இதுவரை, அக்கோரிக்கையை தி.மு.க., அரசு நிறைவேற்ற முன்வராததால், அதிருப்தி அடைந்த கிறிஸ்தவ வன்னியர்கள், திண்டுக்கல்லில் இடஒதுக்கீடு கோரிக்கையை மையப்படுத்தி மாநாடு நடத்தினர். அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிஷப் தாமஸ் பால்சாமி பேசுகையில், 'வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், யாருக்கு ஓட்டளிப்பது குறித்து, தமிழக ஆயர் பேரவை கூடி முடிவெடுக்கும்' என்றார்.
அதே மாநாட்டில், வட மாவட்டத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் பேசுகையில், 'தி.மு.க., அரசு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், விஜய் கட்சிக்கு கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை திசை மாற்றி விடுவோம்' என எச்சரித்தார்.
அவரது பேச்சுக்கு, அம்மாநாட்டில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களிலும், அதை வலியுறுத்தி ஆதரவு பிரசாரம் செய்யப்பட்டது. கத்தோலிக்க பாதிரியார் சிலர், தி.மு.க.,வுக்கு எதிராக செயல்படும் தகவல், முதல்வருக்கு தெரிய வந்ததும், தலைமை செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம், கிறிஸ்தவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தி.மு.க.,வில் உள்ள கிறிஸ்தவ நிர்வாகிகள், 'யு டியூப்' நெறியாளர்கள் வாயிலாக, சமூக வலைதளங்களில், 'விஜய்க்கு ஓட்டளிக்காதீர்கள்' என்ற தலைப்பில், எதிர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், 40 சதவீதம் ஓட்டுக்களை பெற வேண்டும். குறைந்தபட்சம், 35 சதவீதத்துக்கு மேல் எடுக்க வேண்டும். இந்த தேர்தலில் விஜய் கட்சியால், 40 சதவீதம் ஓட்டுக்களை வாங்க முடியாது. எனவே, அவர் உறுதியாக ஆட்சியை பிடிக்க முடியாது.
இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், விஜய் கிறிஸ்துவர் எனக்கருதி, அவருக்கு ஓட்டு போட்டால், அது விஜய்க்கு போடுகிற ஓட்டு அல்ல; மறைமுகமாக பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு செலுத்துகிற ஓட்டு.
அப்படி கிறிஸ்தவர்கள் அணி மாறி ஓட்டுப் போட்டால், தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அதன்பின், உங்கள் கோரிக்கை ஒரு நாளும் நிறைவேறாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -



மேலும்
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
-
குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன