எச்.டி.எப்.சி., - சி.இ.ஓ., மீது புகார்

புதுடில்லி : எச்.டி.எப்.சி., வங்கியின் தலைமை செயல் அதிகாரிக்கு எதிராக, லீலாவதி அறக்கட்டளை அளித்த மோசடி குற்றச்சாட்டில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த எல்.கே.எம்.எம்., எனப்படும் லீலாவதி கீர்த்திலால் மேத்தா மருத்துவ அறக்கட்டளை சார்பில், கடந்த 2001ம் ஆண்டு, அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான 'ஸ்பௌண்டர் ஜெம்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, எச்.டி.எப்.சி., வங்கி கடன் வழங்கியிருந்தது.

இந்த கடன் தொகையை மேத்தா அறக்கட்டளை கட்ட தவறியதை அடுத்து, அக்கடன் தொகை 2025 மே 31ம் தேதி நிலவரப்படி, 65.22 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், எல்.கே.எம்.எம்., அறக்கட்டளை, எச்.டி.எப்.சி., வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சஷிதர் ஜக்தீஷன் மீது கடுமையான நிதி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், ஜக்தீஷன் கடுமையான நிதி மோசடி, குற்றவியல் சதி, நம்பிக்கைக்குரிய பதவியை துஷ்பிரயோகம் செய்தல், சாட்சியங்களை கலைத்தல் மற்றும் நீதி கிடைப்பதை தடுத்தல் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபட்டதாக கூறி, அவரை உடனடியாக பணி நீக்கம் செய்து வழக்கு தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜக்தீஷன், இது குறித்து மேலும் கூறுகையில், ''இது பழிவாங்கும் நடவடிக்கை. நீண்டகாலமாக செலுத்தாமல் உள்ள கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதை தவிர்ப்பதற்கான நோக்கத்துடன் இக்குற்றச்சாட்டை எல்.கே.எம்.எம்., அறக்கட்டளை சுமத்துகிறது,'' என தெரிவித்துள்ளார்.

Advertisement