பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தந்த வழக்கில் உள்துறை இணை செயலாளரிடம் விசாரணை

ராமநாதபுரம் : இந்திய ராணுவ ரகசியங்களை திருட பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த மலேசிய நாட்டை சேர்ந்தவர் மீதான வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக உள்துறை இணை செயலாளர் உதய பாஸ்கரிடம் விசாரணை நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி என்மனங்கொண்டானைச் சேர்ந்தவர் சித்திகலைஹா 52. இவரது அக்காவின் கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் 58. மலேசியாவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்புவை சேர்ந்த முகமது யாசீர் 40, இவரது மனைவி பாரிகா ரிஸ்மியா 35 ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இவர்கள் சித்திகலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கியிருந்தனர். இவர்களை இந்தியர்கள் என சித்தி கலைஹா தனது ரேஷன் கார்டில் முகமதுயாசீர் தம்பி என்றும், பாரிகா ரிஸ்மியா மருமகள் எனவும் பொய்யான தகவல்களை தெரிவித்து ஆதார்கார்டு பெற்று தந்துள்ளார்.

இந்த போலி ஆதார் கார்டு மூலம் இரண்டு சிம்கார்டுகளை முகமது யாசிர் பெற்று பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவி என்பவரிடம் கொடுத்துள்ளார். அந்த சிம்கார்டுகளை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி இந்திய ராணுவத்தின் ரகசியங்களை திருடி வந்துள்ளனர். அலைபேசிகளை ேஹக் செய்து அதில் உள்ள தகவல்களை அழித்துள்ளனர்.

கியூ பிரிவு போலீசார் 2021ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்திகலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முகமது மிப்லால் மவுலவி மட்டும் தலைமறைவானார். மற்ற நான்கு பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஜாமினில் வந்தனர்.

இந்த வழக்கில் சித்திகலைஹா, முகமது யாசிர், பாரிகா ரிஸ்மியா மீது சட்ட விரோத பயன்பாடுகள் சட்டப்பிரிவின் கீழ் வழக்கினை நடத்த அப்போதைய உள்துறை துணை செயலாளரான உதயபாஸ்கர் (தற்போது உள்துறை இணைச் செயலாளராக உள்ளார்), அனுமதி வழங்கினார். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

சித்திகலைஹா, முகமதுயாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல் ரஷீத் ஆகியோர் ஆஜராகினர். உதயபாஸ்கரிடம் காணொலி காட்சி மூலம் நீதிபதி விசாரணை நடத்தினர். மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் பங்கேற்றார். விசாரணை ஜூன் 17 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement