நீர்நிலைகளில் கொட்டி எரிக்கப்படும் குப்பை திடக்கழிவு மேலாண்மை திட்டம் கண்துடைப்பு

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

திடக்கழிவு மேலாண் மை பணியில், குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது, முதன்மையானதாக உள்ளது.

இத்திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும், குடியிருப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

குப்பையை தரம் பிரிக்கவும், உரம் தயாரிக்கவும் ஊராட்சிகளில் உர குடில் அமைக்கப்பட்டது.

துாய்மை பணியாளர்கள் குப்பையை சேகரித்து, மட்கும் மற்றும் மட்காத வகைகளை தனியாக பிரித்து, மட்கும் குப்பையை உரமாக்குவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடாக உள்ளது.

ஆனால், சிங்கபெருமாள் கோவில், வண்டலுார், ஊரப்பாக்கம், கொண்டமங்கலம் உட்பட பெரும்பாலான ஊராட்சிகளில், குப்பையை தரம் பிரிக்கும் பணிகள் முறையாக நடக்கவில்லை.

பொதுமக்களும் விழிப்புணர்வு இல்லாமல், குப்பையை தரம் பிரிக்காமல் மொத்தமாக கொட்டுவதால், பணியாளர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சிங்க பெருமாள் கோவில் உள்ளிட்ட ஊராட்சியில், நீர் நிலைகளில் குப்பை கொட்டப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தீயிட்டு எரிக்கப்படுகிறது.

இதனால், பகுதிவாசிகள், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த பிரச்னைகளை மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், புறநகர் பகுதிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, கிராமங்களில் உள்ள உர குடில்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, போதுமான துாய்மை பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.

அத்துடன், ஊராட்சிகளில் நடக்கும் துாய்மை பணி தொடர்பான அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement