என்னை நடைபிணமாக்கி விட்டு நடைபயணம் செல்கிறார்கள்; எல்லாமே நாடகம்...ராமதாஸ் உச்சகட்ட விரக்தி

விழுப்புரம்: "இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையேற்க எனக்கு உரிமையில்லையா?. இதனை கேட்பதே எனக்கு அவமானம். ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து பார்த்து கட்டிய பா.ம.க., என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே, என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு செயல்பாடுகள் இருந்தன," என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக பேசியுள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: சுதந்திரம் பெறுவதற்காக பாரதியார் கவிதைகளை எழுதுவார். 'இப்பயிரை கண்ணீரால் காத்தோம். எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?' என்று பாடியிருப்பார்.
பேச்சுவார்த்தை டிரா
சிறந்த ஆளுமைகள் உள்ள இரண்டு பேருடைய சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்து விட்டது. ஒரு முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பு 14 பஞ்சாயத்துக்காரர்கள் நடந்தன. நான் தொடங்கிய 34 அமைப்புகளில் ஒன்றிரண்டு பேர் எனக்கு பஞ்சாயத்து பண்ண வந்தார்கள். அடடா, இதுதான் தலைவிதி என்பதோ என்று இதனை ஏற்றுக் கொண்டேன். அனைவரும் ஒரே மாதிரியான தீர்ப்பையே சொன்னார்கள்.
நான் இங்கே இருந்து கொண்டு கட்சியை வளர்ப்பது, அவர் மக்களை பார்ப்பது என்பது தான் அந்த தீர்ப்பு. யாருக்கு நேரம் சரியில்லையோ. அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயாராக இருப்பதாகக் கூறினேன். அதற்காக கவுரவ தலைவர், சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆகியோரை பார்த்து விட்டு வாருங்கள் என்று சொன்னேன். ஆனால், அன்புமணி நம்பவில்லை.
பொங்கிய கோபம்
என்னுள் இருந்த இயற்கையான கோபம் பொங்கி எழுந்தது. நீயா? நானா? என்று பார்த்திடுவோம் என்ற முடிவுக்கு வந்து, இப்போது உங்களை சந்தித்து கொண்டிருக்கிறோம். ராமதாஸ் என்று ஒருத்தன் இருக்கானே, அவன் பெயரைத் தானே பின்னால் போட்டுக் கொண்டுள்ளோம். அவனுக்கு என்னதான் கொடுக்க வேண்டும். நிறுவனர் ராமதாஸா? அவருக்கு கேட்டை சாத்திக்கொண்டு, கொள்ளுப் பேரனுடன் விளையாடிக் கொண்டிருக்கட்டும் என்று சொல்கிறார்கள்.
என்னால் அப்படி இருக்க முடியாது. என்னை பார்க்க வருபவர்களை சந்திப்பேன். நேற்று 300 பேரையும், நேற்று முன்தினம் 700 பேரையும் பார்த்தேன். 46 வருடங்களாக மக்களுடன் பழகி வருகிறேன். அவர்கள் என்னை உயிராக நினைக்கிறார்கள். என்னுடைய பாட்டாளி சொந்தங்களை உயிருக்கு மேலாக நினைக்கிறேன்.
அவமானம்
என்னை குலதெய்வம் என்று சொல்கிறார்கள். நான் அதற்கு மேலே ஒருபடி சென்று, அவர்களை தொண்டர்களாக அல்லாமல், வழிகாட்டிகளாக பார்க்கிறேன். கட்டிக்காத்த கட்சி இது, இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையேற்க எனக்கு உரிமையில்லையா?. இதனை கேட்பதே எனக்கு அவமானம். ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து பார்த்து கட்டிய பா.ம.க., என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே, என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன.
மாவட்ட செயலாளர்கள் வருகையை தடுத்து நிறுத்தி, அவரே (அன்புமணி) செல்போனில் பேசி, என்னை மானபங்கம் செய்துள்ளார். அன்று அமைதி காத்திருந்தால், அதிகாரம் தானாக அன்புமணிக்கு வந்து இருக்கும். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் பேசி, போகாதே, போகாதே என்று கூறியுள்ளார். அப்படியும் மீறி 8 பேர் வந்தார்கள். ஒரு பொய்யான தகவலை சொல்லி, என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்போகிறார் என்று சொல்லி போக வேண்டாம் என்று தடுத்து விட்டார்.
முடிசூட்டு விழா
அந்த மாதிரியான நிகழ்வு நடக்காமல் இருந்தால், ஓரிரு ஆண்டுகளில் முடிசூட்டுவிழா நானே முன்னின்று நடத்தியிருப்பேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு முடிசூட்டு விழா நடந்தது. அப்போதுஆனந்த கண்ணீர் விட்டேன்.
தாரக மந்திரம்
தீர்வு காண்பதற்கு தாரக மந்திரம் என்னவென்றால், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தைக்குப் பிறகு தனயன். அய்யாவுக்குப் பிறகே அன்புமணி என்பது அனைவரும் சொல்லும் வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே, நீதி, நேர்மை, தர்மம்.
மனக் குமுறல்கள்
என்னை எங்கள் குலசாமி என்று சொல்லிக் கொண்டே, என் நெஞ்சில் குத்துகிறார்கள்.எங்களுக்கு எல்லாம் அய்யா தான் என்று சொல்லிக் கொண்டே, என்னை அதளபாதாளத்தில் தள்ளுகிறார்கள். அனைத்தும் அய்யா தான் என்று சொல்லிக் கொண்டே என்னை அவமானப்படுத்துகிறார்கள். அய்யாவின் பெருமையை பேசுவதே எங்களின் நோக்கம் என்று சொல்லிக் கொண்டே, என்னை சிறுமைப்படுத்துகின்றனர்.
நடைபிணம்
அய்யாவின் லட்சியமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொண்டே, என்னை இலக்காக தாக்குகின்றனர். இவையெல்லாம் நான் உருவாக்கி சமூக ஊடகப் பிரிவும், சமூக வலைதளங்களின் மூலம் எனக்கு எதிராக செய்கின்றனர். என் கைவிரல் கொண்டே என் கண்ணை குத்திக் கொண்டேன். உயிருள்ள என்னை எல்லா பக்கமும் என்னை உதாசீனப்படுத்திவிட்டு, உருவப்படத்தை மட்டும் வைத்து விட்டு, உ ற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணமாக்கி விட்டு, நடைபயணம் செய்கிறார்கள். எல்லாமே நாடகம். அதில், ஒவ்வொருவரும் நடிகர்கள், இவ்வாறு அவர் கூறினார்.
அப்படி என்னதான் வேண்டுதல்!
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு நான் டில்லி சென்றிருந்தேன். கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ஆகிய 3 பேரும் விழாவுக்கு சென்றோம். அங்கிருந்து கிளம்பி வரும் போது, 'அப்பா இந்தக் கட்சியை நான் பார்த்துகிறேன்', என்று அன்புமணி கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விமானத்தில் ஏறிய போது, 'நான் தவறாக சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள்,' என்று அவர் கூறினார். அப்போது, 2 சொட்டு கண்ணீர் சிந்தினேன். இது நடந்து 6 அல்லது 7 ஆண்டுகள் இருக்கும். அப்போதே, அன்புமணிக்கு அப்படியொரு எண்ணம் இருந்துள்ளது. அதன்பிறகு, அவர் எப்படி தலைவரானார்? என்பது சிலருக்கு தெரியும். சிலருக்கு தெரியாது. ஒரு நாள் மனசு சரியில்லை என்று நினைத்து மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். இதை எப்படியோ தெரிந்து கொண்டு, சௌமியா அங்கு வந்தார். தலைவரை மாற்றுவதற்காக மண்டபத்தை பார்த்து விட்டேன் எனக் கூறினார். ஒன்றரை மாதத்திற்கு பிறகு தலைவர் பதவியை மாற்றிக் கொள்ளலாம் என்றேன். அதன்படி, தலைவர் பதவி அன்புமணிக்கு கொடுக்கப்பட்டது. என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சொன்னேன். ஆனால், இப்போது நடப்பது எல்லாம் உங்களுக்கு தெரியும். அவர் (சவுமியா) கோவில் கோவிலாக செல்கிறார். என்ன வேண்டுதலுக்காக செல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அது அவர்களின் உரிமை நான் ஏதும் சொல்லவில்லை. என்னுடைய ஜாதகத்தை ஆத்தூரில் உள்ள ஜோதிடரிடம் கொண்டு சென்று பார்த்துள்ளார்கள். இந்த மாதிரி ஜாதகம் 7 தலைமுறையாக பார்த்ததில்லை என்று கூறினாராம். எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.









மேலும்
-
ஜூன் 15ம் தேதி கல்லணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை: விமான விபத்தில் தப்பிய விஸ்வாஸ் பேட்டி
-
டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர தரையிறக்கம்!
-
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்; இஸ்ரேல் - ஈரானுக்கு இந்தியா வலியுறுத்தல்
-
போலி பால் தயாரித்து விற்பனை: தென்காசி அருகே 3 பேர் கைது!
-
லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாப பலி: நீதிபதி காயம்