பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளர்கள் 3 பேர் பரிதாப பலி!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வடகரையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வடகரையில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பட்டாசு ஆலையில், ஒரு அறை இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. வெடி விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 பேர் கைது!
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலையின் போர்மேன் வீர சேகரன், மேற்பார்வையாளர் கனி முருகன் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ராஜா சந்திர சேகரை போலீசார் தேடி வருகின்றனர்.
நிவாரணம்
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


மேலும்
-
ராதா யாதவ் தேர்வு: இந்திய அணியில் மாற்றம்
-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ., விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
-
சத்தீஸ்கரில் ரூ.19 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 3 நக்சல்கள் சரண்
-
பயணியிடம் ரூ.5 லட்சம் திருட்டு: டில்லியில் டிரைவர் உட்பட இருவர் கைது
-
விவசாயிகளின் நலனுக்கு துரோகம் செய்யும் அரசு : அன்புமணி குற்றச்சாட்டு
-
ஆமதாபாத்தில் நெஞ்சைப்பிழியும் துயரம்; லண்டன் புறப்பட்ட விமானம் வெடித்துச் சிதறியது; உயிரிழந்த 204 பேர் உடல் மீட்பு