பயணியிடம் ரூ.5 லட்சம் திருட்டு: டில்லியில் டிரைவர் உட்பட இருவர் கைது

1

புதுடில்லி: டில்லியில் பயணியிடம் ரூ.5 லட்சம் திருடியதாக இ-ரிக்ஷா டிரைவர் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


டில்லியில் பயணிகள் வசதிக்காக மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வாகனம் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வடக்கு டில்லியில் லஹோரி கேட் பகுதியில் பயணியிடமிருந்து ரூ.5 லட்சம் திருடியதாக இ-ரிக்ஷா டிரைவரும் அவரது கூட்டாளியும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடந்தது. அப்போது தினேஷ் குமார் 34, என்பவர், குச்சா காசி ராம் பகுதியில் பணம் வசூலித்து இ-ரிக்ஷாவில் மாலையில் பயணம் செய்துள்ளார். அந்த வாகனத்தை டிரைவர் சங்கர் 32, இயக்க அவருடன் மகேந்தர் பர்மர் 34, உடன் இருந்தார். இவர்கள் தவிர அந்த வாகனத்தில் ஏற்கனவே இரண்டு பெண்கள் இருந்துள்ளனர். சிறிது துாரம் சென்ற பிறகு பில்லி கோதி என்று இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தினேஷ் குமாரை கீழே இறங்கும்படி கட்டாயப்படுத்தினார். அப்போதுதான் தான் வைத்திருந்த பை திறக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.5 லட்சம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரும் மீதும் தினேஷ் குமார் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக டில்லி போலீசார் கூறியதாவது:

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு டிரைவர் சங்கரை கண்காணித்து முதலில் கைது செய்தோம். அதை தொடர்ந்து அவரது கூட்டாளி மகேந்தர் பர்மரை கைது செய்தோம். அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது. விசாரணையில், சங்கர் மற்றும் மகேந்தர் பர்மர் இருவரும் வேலை தேடி, 6 மாதத்திற்கு முன்பு டில்லிக்கு வந்துள்ளனர். சங்கர் வாடகைக்கு இ-ரிக்ஷா எடுத்து ஓட்டினார். அவரது கூட்டாளி மகேந்தர் பர்மர் பழைய உடைகளை வாங்கி, விற்பனை செய்வதில் ஈடுபட்டார். இருவருக்கும் வருமானம் போதாத நிலையில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக மகேந்தர் பர்மர் திருடுவதில் கைதேர்ந்தவர். இருவரும் பயணிகளை கவர்ந்து வாகனத்தில் ஏறவைத்து அதன் பின்னர் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது இருவரும் சிக்கி உள்ளனர். 3வது கூட்டாளியான கீதா என்ற பெண் தலைமைறவாக உள்ளார். விரைவில் அந்த பெண்ணையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு போலீசார் கூறினார்.

Advertisement