சத்தீஸ்கரில் ரூ.19 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 3 நக்சல்கள் சரண்

நாராயண்பூர்: சத்தீஸ்கரில், 19 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சல்கள் 3 பேர் போலீசிடம் சரண் அடைந்தனர்.

நக்சல்கள் நடவடிக்கை முழுவதுமாக அழிக்கப்படும் என்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. நக்சல் அமைப்பினரின் முக்கிய பதுங்கும் இடங்கள் தாக்கி ஒழிக்கப்படுகின்றன. நக்சல் அமைப்பின் முன்னணி தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நக்சல்கள் சரண் அடையும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது 3 நக்சல்கள் சரண் அடைந்துள்ளார்கள். இவர்களைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் 19 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:

சரண் அடைந்தவர்கள் பீமா என்ற தினேஷ் போடியம் 40, சுக்லி கோரம் என்ற சப்னா மற்றும் தேவ்லி மந்தவி 22, ஆகிய இரு பெண்கள் ஆவர். இவர்கள் 19 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள். வெற்று சித்தாந்தம் மற்றும் பழங்குடியினரை சுரண்டுதல் ஆகியவற்றின் காரணமாக ஏமாற்றம் அடைந்து போலீசில் சரண் அடைந்துள்ளதாக மூவரும் தெரிவித்தனர். மேலும் பஸ்தர் பகுதியில் பாதுகாப்பு படைகளின் செல்வாக்கு அதிகரித்து வந்த நிலையில், இந்த மூவரும் மூத்த காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப்.,அதிகாரிகள் முன் சரண் அடைந்தனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement