டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் மும்பை

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் அரையிறுதிக்கு மும்பை அணி முன்னேறியது.

ஆமதாபாத்தில் (குஜராத்), அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் மும்பையின் லிலியன் பார்டெட் 2-1 என டில்லியின் சத்யனை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பெர்னாடெட் சோக்ஸ் (மும்பை) 2-1 என தியாவை (டில்லி) வென்றார்.

கலப்பு இரட்டையர் போட்டியில் டில்லியின் தியா, கியூக் இசாக் ஜோடி 2-1 என மும்பையின் பெர்னாடெட் சோக்ஸ், ஆகாஷ் பால் ஜோடியை தோற்கடித்தது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் மும்பையின் அபினந்த் 2-1 என டில்லியின் கியூக் இசாக்கை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் யாஷஸ்வினி (மும்பை) 3-0 என சுஹானா சைனியை வீழ்த்தினார்.

முடிவில் மும்பை அணி 10-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த டில்லி, கோவா, மும்பை, ஜெய்ப்பூர் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன.


முதல் அரையிறுதியில் (ஜூன் 13) டில்லி - ஜெய்ப்பூர் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் (ஜூன் 14) கோவா - மும்பை அணிகள் விளையாடுகின்றன. பைனல், ஜூன் 15ல் நடக்கவுள்ளது.

Advertisement