இடுக்கியில் பலத்த மழை: அணைகள் திறப்பு

மூணாறு; கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், ஒரு வார இடைவெளிக்கு பின், மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவ மழை, கேரளாவில் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே மே, 24ல் துவங்கி, ஒரு வாரம் கன மழை பெய்தது. அதன் பின், மழை வெகுவாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இடுக்கியில், ஜூன், 11 மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பலத்த மழைக்கான 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்ட நிலையில், இன்றும் அதே எச்சரிக்கை தொடர்கிறது. அதே போல் நாளை, நாளை மறுநாள் கன மழைக்கான 'ஆரஞ்ச் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்லார் குட்டி, பாம்ளா ஆகிய அணைகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர், உடும்பன்சோலையில், நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினர். மீட்பு படை இன்ஸ்பெக்டர் சுஜீத் தலைமையில் கேப் ரோடு, பண்ணியாறுகுட்டி, ஸ்ரீ நாராயணபுரம், ரிப்பிள் நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஆய்வு நடந்தது.

Advertisement