தங்க சுரங்க நிலம் சர்வே பணி ஆரம்பம்

தங்கவயல்: தங்கச் சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் எங்கெங்கு உள்ளன என்பது குறித்து வருவாய்த்துறையினர் சர்வே பணியை துவக்கி உள்ளனர்.
தங்கச் சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமாக தங்கச் சுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், பூங்காக்கள், ஏரிகள், விளையாட்டு மைதானங்கள், கிளப்புகள் உட்பட 12 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக ஆவணங்களில் உள்ளது. தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு மத்திய அரசு பாதுகாத்து வருகிறது.
இந்த நிலத்தில் 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். சுரங்க நிலத்தை பலரும் சட்டவிரோதமாக வருவாய்த்துறையினர் உதவியுடன் தங்கள் பெயருக்கு பதிவும் செய்துள்ளனர்.
தங்கச்சுரங்கத்திற்கு பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை பலரும் ஆக்கிரமித்து இருப்பதாகவும் அவற்றை அகற்றக் கோரியும் மாவட்ட கலெக்டர், தங்கவயல் தாசில்தாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முதற்கட்டமாக கிருஷ்ணாபுரம் கிராம பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
தங்கச் சுரங்க நிறுவனமும், கர்நாடக அரசின் வருவாய்த் துறையும் இணைந்து கூட்டாக சர்வே பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.