கருப்பு பெட்டி மீட்பு

புதுடில்லி : 'ஏர் - இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை அறிய, பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டியை தேடும் பணியை, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணை முகமை மேற்கொண்டது.

விபத்து ஏற்பட்ட பி.ஜே., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் தேடுதல் பணி நடந்தது.

பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டி என்ற கருவியில், விமானியின் குரல் உட்பட அனைத்து தரவுகளும் பதிவு செய்யப்படும்.

விபத்து நேரும் போது, அது குறித்த விபரங்களை விமானி அதில் பதிவு செய்வார். இதன் வாயிலாக விபத்துக்கான காரணங்களை கண்டறிய முடியும்.

இந்நிலையில், பி.ஜே., மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று கூறுகையில், ''ஆமதாபாதில் விபத்து நடந்த இடத்திலிருந்து, 28 மணி நேரத்திற்குள் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

''இது விசாரணையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்,'' என்றார்.

இதனிடையே, விபத்தில் சிக்கிய, 'ஏர் - இந்தியா' விமானத்தின், 'டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்' கருவியையும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். மேலும், 'ஏர் - இந்தியா' விமானத்தின், 'எமர்ஜன்சி லொக்கேட்டர் டிரான்ஸ்மிட்டர்' எனப்படும் இருப்பிட கண்காணிப்பு கருவியும் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், மத்திய அரசின் பிற பாதுகாப்பு அதிகாரிகளும் விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். ஆனால், அவர்கள் விசாரணை குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

Advertisement