கோகோ விளையாட்டு வீரர்கள் நிறைந்த கிராமம்

சுரபுரா தாலுகாவின், தேவரகோனாளா கிராமம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு வீட்டிலும் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இதே காரணத்தால் இந்த கிராமம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாத்கிர் மாவட்டம், சுரபுரா தாலுகாவில், தேவரகோனாளா கிராமம் உள்ளது. கிராமத்தில் படித்தவர்களே அதிகம். ஒவ்வொரு வீட்டிலும் அரசு ஊழியர்கள் உள்ளனர். அதேபோன்று இந்த கிராமம் கோகோ விளையாட்டு வீரர்கள் நிறைந்துள்ள கிராமமாகும். இங்கு 60க்கும் மேற்பட்ட மாநில, தேசிய அளவிலான கோகோ விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

குல்பர்கா பல்கலைக் கழகத்தின், முன்னாள் கோகோ விளையாட்டு வீரரான பீமண்ணா தீவளகுட்டா, தற்போது கர்நாடக கோகோ அசோசியேஷன் தலைவராக பதவி வகிக்கிறார். இவரும், இதே கிராமத்தை சேர்ந்தவர். கிராமத்தின் 20க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், பல்வேறு இடங்களில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியற்றுகின்றனர்.

சாஹேப் கவுடா ஹனுமந்தராயகவுடா மாலி பாட்டீல், 22, கோகோ விளையாட்டில் அபார சாதனை செய்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை தேவரகோனாளா கிராமத்தில் படித்தார். இவருக்குள் மறைந்திருந்த கோகோ விளையாட்டு திறனை தெரிந்து கொண்ட உடற்பயிற்சி ஆசிரியர் பீமராய மல்லாபுரா, கோகோ பயிற்சி அளித்தார். சாஹேப் கவுடா ஏழாம் வகுப்பு படித்த போது, தொடக்க பள்ளி அளவில் நடந்த போட்டியில், இரண்டாம் இடம் பெற்றார்.

ஒன்பதாம் வகுப்பு படித்த போது, மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார். தசரா விளையாட்டு போட்டியில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்றார். இவரது விளையாட்டு சாதனையை அடையாளம் கண்டு, மூடபிதரேவின் ஆள்வாஸ் கல்வி நிறுவனம் விளையாட்டு கோட்டாவில் சாஹேப் கவுடாவுக்கு இலவச அட்மிஷன் வழங்கியது.

கடந்த 2024ல் கோழிக்கோட்டில் நடந்த, தென்னக அளவிலான பல்கலைக்கழகங்கள் இடையிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். 2025ல் உடுப்பியில் நடந்த அனைத்திந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான போட்டியில், சாஹேப் கவுடாவின் திறமையான விளையாட்டால் இவரது அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

மான் போன்ற இவரது ஓட்டம், எதிரணியிடம் சிக்காமல் தாவி விளையாடும் இவரது திறன், காண்போரை வியக்க வைக்கும். விளையாட்டில் சாதிக்கும் சாஹேப் கவுடா, படிப்பிலும் சூட்டிகை. எஸ்.எஸ்.எல்.சி.,யில் 92 சதவீதம், பி.யு.சி.,யில் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவருக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இவரது தந்தை கூலி வேலை செய்கிறார். விளையாட்டில் மேலும் சாதனை செய்ய வேண்டும். யு.பி.எஸ்.சி., தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பது, அவரது ஆசையாகும்.


சாஹேப் கவுடாவை போன்று, 60 க்கும் மேற்பட்ட கோகோ விளையாட்டு வீரர்கள், இந்த கிராமத்தில் உள்ளனர். இவர்களில் சிறுமியரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோகோ மட்டுமின்றி கபடி, வாலிபால், மல்யுத்த வீரர்களும் கிராமத்தில் உள்ளனர். இவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, மாநிலத்தின் கவனத்தை ஈர்க்கின்றனர். இவர்களுக்கு மாநில அரசு ஊக்கமளித்தால், மேலும் சாதனை செய்வார்கள் என்பதில், சிறிதும் சந்தேகம் இல்லை.
சாஹேப் கவுடாவை போன்று, 60 க்கும் மேற்பட்ட கோகோ விளையாட்டு வீரர்கள், இந்த கிராமத்தில் உள்ளனர். இவர்களில் சிறுமியரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோகோ மட்டுமின்றி கபடி, வாலிபால், மல்யுத்த வீரர்களும் கிராமத்தில் உள்ளனர். இவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, மாநிலத்தின் கவனத்தை ஈர்க்கின்றனர். இவர்களுக்கு மாநில அரசு ஊக்கமளித்தால், மேலும் சாதனை செய்வார்கள் என்பதில், சிறிதும் சந்தேகம் இல்லை.

- நமது நிருபர் -

Advertisement