'புரோ லீக்' போட்டியை பார்த்து கபடி வீரரான வீரேஷ்

இன்றைய கால இளம் தலைமுறையினருக்கு விளையாட்டு என்றாலே, அது கிரிக்கெட் மட்டும் தான் என்ற எண்ணம் உள்ளது. கிரிக்கெட்டை தாண்டி நிறைய விளையாட்டுகள் உள்ளன. ஆனால், மற்ற விளையாட்டுகளை பார்க்கவோ, விளையாடவோ ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால் புரோ லீக் கபடி போட்டியை, 'டிவி' யில் பார்த்து ஏற்பட்ட ஆர்வத்தால், இளைஞர் ஒருவர் கபடி வீரராக மாறி உள்ளார்.
கர்நாடகாவின் வடமாவட்டமான தார்வாடின் ஹரோபெலவாடி கிராமத்தை சேர்ந்தவர் வீரேஷ் தோரணகட்டி, 17; கபடி வீரர். சாய் எனும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் கபடி அணி கடந்த ஆண்டு பீஹாரில் நடந்த 33 வது சப் ஜூனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது. இந்த அணிக்கு தலைமை தாங்கியவர் வீரேஷ். தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.
தனது கபடி பயணம் குறித்து வீரேஷ் கூறியதாவது:
எனக்கு சிறு வயதில் கபடியில் ஆர்வம் கிடையாது. ஆனால் புரோ லீக் போட்டியை, 'டிவி' யில் பார்த்து ஏற்பட்ட ஆர்வத்தால் கபடி விளையாட ஆரம்பித்தேன். நான் 9ம் வகுப்பு படிக்கும் போது தார்வாடில் உள்ள சாய் மையத்தில், கபடி விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ரங்கநாத் என்ற பயிற்சியாளர் எனது திறமையை அடையாளம் கண்டு ஊக்கம் அளித்தார். சாய் அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த கவுரவம்.
எனது அப்பா தாலுகா பஞ்சாயத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார். வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். ஆனாலும் கபடி வீரர் ஆக வேண்டும் என்ற எனது கனவை நனவாக்க அனைத்து உதவியும் செய்கிறார். வருங்காலத்தில் இந்திய கபடி அணிக்கு ஆட வேண்டும் என்பது எனது ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.