எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் பற்றி அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
காசாவைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வந்த ஈரான் மீது 'ஆபரேசன் ரைஸிங் லயன்' என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அணுசக்தி நிலையங்களை குறிவைத்து சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் ஈரான் துணை ராணுவப் படை தளபதி ஹுசைன் சலாமி உயிரிழந்தார். இதனால், மத்திய கிழக்கு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது.
ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையப் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது; ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளின் பாதுகாப்பு பற்றியே எங்களின் கவலை உள்ளது. அமெரிக்க நிலைகளையோ, அமெரிக்க படைகளையோ ஈரான் இலக்காக வைக்கக் கூடாது. தங்களின் பாதுகாப்புக்காகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இவ்வாறு கூறினார்.
அதேபோல, ஐ.நா., கூறியிருப்பதாவது; மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு ஐ.நா.,பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிக்கிறது. ஐ.நா.,வின் சர்வதேச சட்டதிட்டங்களை உறுப்பு நாடுகள் கடைபிடிக்க வேண்டும். இருதரப்பினரும் தீவிர தாக்குதலை கைவிட வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




