இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னையை தீர்க்கும் நவீன உபகரணங்கள்
எனக்கு காது கேட்காது ஆனால் என் தொட்டியில் துாங்கும் குழந்தை அழுதால் நான் உஷராகி உடனே என் குழந்தையை கவனிக்க வேண்டும் அப்போதுதான் அது பசிக்கு அழுகிறதா? இல்லையா? என்பது குறித்து எனக்கு தெரியும்...என்று காது கேட்காத வாய் பேச இயலாத ஒரு தாய் சைகை மொழியிலேயே விசாரிக்கிறார்.
அவருக்கான பதில் கிடைப்பதற்குள்எதற்கு இந்த விசாரிப்பு என்பதை சொல்லிவிடலாம்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன உபகரணங்கள் பற்றிய இரண்டு நாள் அரசு சார்பிலான கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வரிசையாக இடம் பெற்றிருந்தது.
அந்த அரங்குகளில் ஒன்றில்தான் காது கேட்காத தாய் தன் பிரச்னைக்கு தீர்வு கேட்டார், அதற்கு பதிலாக ஒரு கைக்கெடிகாரத்தைக் காண்பித்தனர், குழந்தை அழுதாலோ சத்தம் போட்டாலோ உடனே டிஜிட்டல் கெடிகாரம் உடலில் அதிர்வை தொடர்ச்சியாக எழுப்பும் இதை உணர்ந்து குழந்தையைக் கவனிக்கலாம் என்றனர்.
நமக்கு சாப்பிடுவதும் தண்ணீர் அருந்துவதும் நடப்பதும் சாதாரண விஷயம் ஆனால் கால் கை இழந்தவர்களுக்கு அது அசாதாரணம்.தட்டில் இருக்கும் உணவை செயற்கை கை உபயோகித்து எடுத்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டால் கூட அது சாதனைதான்.
இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை எளிமைப்படுத்தும் விதமாக ரிஷி கிருஷ்ணா பல உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார் இவரே ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் தனது தேவையே மற்றவர்கள் சேவை, என்பதை உணர்ந்து கண்டுபிடித்துள்ளார்.
சக்கர நாற்காலி உபயோகிப்பவர்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது சிரமம் அந்த சிரமத்தை குறைக்கும் விதத்தில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கக்கூடிய சக்கரநாற்காலி வந்துள்ளது.
மனவளர்ச்சி குறைந்த குழந்தைகள் தாங்களே தயாரித்த சுற்றுச் சுழலுக்கு ஏற்ற கீசெயின் பர்ஸ் போன்றவைகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
பிரெய்லி முறையில் வேகமாக எழுதுவதற்கான சாதனம்,எதிரே தென்படும் பொருளை பற்றி சொல்லி எச்சரிக்கும் கண்கண்ணாடி,வித்தியாசமான விளயைாட்டுப் பொருட்கள் என்று பல விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.
மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கையை முடிந்தவரை எளிதாக மாற்றியமைக்கும் விதத்தில் வந்துள்ளள இந்த உபகரணங்களின் கண்காட்சி விடுமுறை நாட்களில் நடக்கவேண்டும் கூடுதல் நாட்கள் நடக்கவேண்டும், எல்லா ஊர்களிலும் நடக்கவேண்டும் .
-எல்.முருகராஜ்
