போயிங் விமானங்களின் பாதுகாப்பு: ஆய்வு செய்ய ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ உத்தரவு

3

புதுடில்லி: ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவின் போயிங் 787 - 8 / 9 ரக விமானங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமானப்போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையமான விமான போக்குவரத்து ஆணையரகம்(டிஜிசிஏ) உத்தரவிட்டு உள்ளது.


ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவின் 'போயிங்' 787-8' ரக 'ட்ரீம் லைனர்' இரட்டை இன்ஜின் விமானம், நேற்று மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது. 30 வினாடிகளில் இந்த விமானம், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் பயணிகள் , விமான ஊழியர்கள் உட்பட 265 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், டிஜிசிஏ வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: பிராந்திய டிஜிசிஏ அதிகாரிகளுடன் இணைந்து Gen X இன்ஜின்கள் பொருத்தப்பட்ட விமானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.


அத்துடன், வரும் ஞாயிறு முதல், விமானம் கிளம்புவதற்கு முன்னர், எரிபொருள் அளவு கண்காணிப்பு மற்றும் தொடர்புடைய அமைப்பு சோதனைகள், ஹைட்ராலிக் அமைப்பு மற்றும் விமானம் பறப்பதற்கான அமைப்புகள் உள்ளிட்டவற்றை தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.


மேலும் மறு அறிவிப்பு வரும் வரை 'விமான கட்டுப்பாட்டு ஆய்வு' முறையை அறிமுகம் செய்ய வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மின் உறுதி சோதனை செய்வது முக்கியம்.
போயிங் 787 -8 / 9 ரக விமானங்களில் கடந்த 15 நாட்களில் ஏற்பட்ட கோளாறுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பராமரிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆய்வு குறித்த அறிக்கைகளை டிஜிசிஏ.,விடம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement