அரசு பள்ளிகளுக்கு நடப்பாண்டு ரூ.58.86 கோடி மத்திய அரசு வழங்கல்

சிவகங்கை: அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நடப்பு கல்வி ஆண்டுக்கு (2025--2026) ரூ.58.86 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்த நிதியின் மூலம் அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பெற வேண்டும். ஆசிரியருக்கு வழங்கிய 'டேப்லெட்'-க்கான 'சிம்' கார்டுக்கு (ஆசிரியருக்கு தலா ரூ.110) செலவிட வேண்டும். பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப மானியம்



ஒன்று முதல் 30 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு மானிய தொகை ரூ.10,000ல் ரூ.1000யை முழு சுகாதாரத்திற்காக பயன்படுத்த வேண்டும். 31 முதல் 100 மாணவர் உள்ள பள்ளிக்கு ரூ.25,000ல் ரூ.2500, 101 முதல் 250 மாணவர்களை கொண்ட பள்ளிக்கு ரூ.50,000ல் ரூ.5,000, 251 முதல் 1000 மாணவர்களை கொண்ட பள்ளிக்கு ரூ.75,000ல் ரூ.7500ம், 1000 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிக்கு மானிய தொகை ரூ.1 லட்சத்தில் ரூ.10,000யை சுகாதார திட்டத்திற்காக மட்டுமே செலவிட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 31,147 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மத்திய அரசின் மானிய தொகை ரூ.39 கோடியே 9 லட்சத்து 57 ஆயிரத்து 500, 6329 அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு ரூ.19 கோடியே 76 லட்சத்து 57 ஆயிரத்து 500 வீதம் முதற்கட்ட மானிய தொகை ரூ.58 கோடியே 86 லட்சத்து 15 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

Advertisement