காலை உணவு சாப்பிட்ட 30 மாணவியர் 'அட்மிட்'

தஞ்சாவூர்: அரசு விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவி யர் உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், செயல்படும் மாணவியர் விடுதி, மூன்று ஆண்டுகளாக தனியார் திருமண மண்டபத்தில் இயங்கி வருகிறது. இதில், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவியர் தங்கியுள்ளனர்.

நேற்று காலை, விடுதியில் காலை உணவாக சாதம், புளிக்குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்ட 30 மாணவியர் பள்ளி சென்ற போது, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே, 30 மாணவியரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மாணவியரை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த ஆர்.டி.ஓ., சங்கர், தாசில்தார் தர்மேந்திரா, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவியரிடம் நலம் விசாரித்தனர்.

மேலும், உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு மாதிரிகளை சேகரித்து சென்றனர்.

Advertisement