100 நாள் வேலை ரூ.50 சம்பளம் தந்ததால் மறியல்

வேப்பந்தட்டை: பெரம்பலுார் மாவட்டம், தழுதாழை ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தின் வாயிலாக வாய்க்கால் துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியில் கடந்த மாதம் தழுதாழை கிராமத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்தனர்.

அவர்களுக்கு ஒருநாள் ஊதியமாக, 50 ரூபாய்க்கு குறைவாக வங்கியில் நேற்று முன்தினம் வரவு வைக்கப்பட்டதை அறிந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அரும்பாவூர் - பெரம்பலுார் சாலையில், தழுதாழையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் அரும்பாவூர் போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தபின், மறியலை கைவிட்டு கலைந்தனர்.

Advertisement