தென்காசி முதியோர் இல்லத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி முதியோர் இல்லத்தில் மேலும் ஒரு பெண் இறந்ததால், உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட உயிரிழப்பு 4 ஆக உயர்ந்தது. தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே கீழபாட்டாகுறிச்சியில், ராஜேந்திரன் என்பவர் நடத்தி வந்த அன்னை முதியோர் இல்லத்தில், 60 பேர் தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன் உணவு சாப்பிட்ட முதியோர் சிலருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக, 11 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், செங்கோட்டையை சேர்ந்த சங்கர் கணேஷ், 48, அம்பிகா, 40, சொக்கம்பட்டியை சேர்ந்த முருகம்மாள், 45, ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து, முதியோர் இல்லத்தில் உணவு சாப்பிட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல்நல பாதிப்பு அதிகம் உள்ள, 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை மதுரையை சேர்ந்த தனலட்சுமி, 70, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8க்கும் அதிகமானோர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதியோர் இல்ல நிர்வாகி தென்காசியை சேர்ந்த ராஜேந்திரனை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement