'குடி'மகன்கள் 'கொர்ர்ர்...' பயணிகள் முகம் சுளிப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பீ., காலனி பஸ் ஸ்டாப்பில் இருக்கை வசதியுடன் கூடிய நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடத்தில், இரவு, பகல் பாராமல், 'குடி'மகன்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அங்கேயே அமர்ந்து மது அருந்துவது, அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு கழிவுகளை வீசுவது, மது பாட்டில்களை உடைப்பது என, தொல்லை தருகின்றனர். மேலும், போதை தலைக்கேறிய நிலையில், நிழற்கூட இருக்கையில் அறைகுறை ஆடையுடன், 'ஹாயாக' குரட்டைவிட்டு துாங்குகின்றனர். சில நேரங்களில், சிறுநீர் கழித்தபடி சுயநினைவின்றி படுத்துக்கிடக்கின்றனர்.

இதனால் பஸ்சுக்காக அங்கு காத்திருக்கும் பெண்கள், சிறுவர்கள் அச்சத்துடனும், முகம் சுளித்து நிற்கின்றனர். பயணிகளுக்காக கட்டப்பட்ட நிழற்கூடம், 'குடி'மகன்களுக்கு தான் பயன்படுகிறது. எனவே, ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், 'குடி'மகன்களை விரட்டி அடிக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement