டில்லி உஷ்ஷ்ஷ்: தம்பிதுரையின் தனி ஆவர்த்தனம்!

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்து ஆதாரத்துடன் வெளிநாட்டு தலைவர்களுக்கு விளக்க, 51 எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்கள் வெளிநாடு சென்று திரும்பின.

இந்த குழுவில் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரையும் இருந்தார். முன்னாள் பா.ஜ., அமைச்சரும், எம்.பி.,யுமான ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவில், தம்பிதுரை இருந்தார். பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இந்த குழு சென்று வந்தது.

அனைத்து எம்.பி.,க்கள் குழுக்களையும், தன் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் பிரதமர் மோடி. அவர்களுடைய அனுபவங்கள் குறித்து விசாரித்தார்.

அப்போது, தம்பிதுரை பிரதமரிடம் தனியாக ஒரு அறிக்கையை அளித்தாராம்; இது, சக எம்.பி.,க்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'ஒவ்வொரு குழுவும் அறிக்கை அளிக்கும்போது. இவர் மட்டும் ஏன் தனி ஆவர்த்தனம் செய்கிறார்? இதிலும் ஏதாவது அரசியல் செய்கிறாரா...' என, சந்தேகப்பட்டனர்.

தான் சென்ற நாடுகளில், ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக என்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டன, இதற்கு சம்பந்தப்பட்ட நாட்டு தலைவர்களின் கருத்து என்ன என்பது குறித்துதான் அவரது அறிக்கையில் இருந்ததாம்.

'தமிழக அரசியல் குறித்து எதுவும் இல்லை; தனி அறிக்கை வாயிலாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் தம்பிதுரை' என்கின்றனர் சக எம்.பி.,க்கள்.

Advertisement