அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க அழகிரி மகன் திடீர் மனு

2

மதுரை : மதுரை மாவட்டம், மேலுார் அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரத்தில், அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, மதுரை சி.பி.ஐ., நீதிமன்றம் ஒத்தி வைத்தது.


சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக, 'ஒலிம்பஸ் கிரானைட்ஸ்' நிறுவனம், அதன் இயக்குநர்களாக இருந்த நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி ஆகியோர் மீது, கீழவளவு போலீசார் 2012ல் வழக்கு பதிந்தனர்.



இதனால், அரசுக்கு 256.44 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி ஆதாயமடைந்ததாக கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ், மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் வழக்கு பதிந்தது.



இதிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தயாநிதி, மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கை நீதிபதி சண்முகவேல் விசாரித்தார்.



தயாநிதி தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'மனுதாரர் தயாநிதிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனரீதியான பிரச்னைகள் இருப்பதால் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்' என்றார்.


இதற்கு பதில் அளித்து, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'மனுதாரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரது மனநிலையை உறுதி செய்ய வேண்டும். அவருக்கு இருந்த பாதிப்புகள் நீங்கி விட்டதாக தகவல்' என கூறினார்.



இதையடுத்து, ''தயாநிதியின் சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களை, நாளை தாக்கல் செய்ய வேண்டும்,'' என நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தார்

Advertisement