கவர்னர் ஆகிறார் அஜித் தோவல்?

32

புதுடில்லி: நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவல். 80 வயதாகும் இவர் ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர். மோடி முதன் முறையாக பிரதமரான, 2014லிருந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் உள்ளார்; மத்திய அமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர்.கேரள கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். மோடியின் நம்பிக்கைக்கு உரியவர்; இந்தியாவின் பாதுகாப்பிற்காக பல வீரதீரச் செயல்களில் ஈடுபட்டவர்.

இவர், சமீபத்தில் மும்பை சென்று, மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிசை சந்தித்தார். 'அஜித் தோவலை வரவேற்கிறேன்' என தன், 'எக்ஸ்' தளத்தில் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்தார் பட்னவிஸ். இது, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வயதாகிவிட்ட தோவலுக்கு உடல் ரீதியான பல பிரச்னைகள் உள்ளதாம். ஆனாலும், இவரை விட்டுவிட பிரதமர் விரும்பவில்லை. எனவே, இவருக்கு கவர்னர் பதவி அளிக்க மோடி முடிவு செய்துள்ளார்' என, கிசுகிசுக்கப்படுகிறது. 'மஹாராஷ்டிர கவர்னர் பதவி இவருக்கு கிடைக்கும்; அதனால்தான், முதல்வரை சந்தித்து உள்ளார்' என்கின்றனர்.

'அப்படியானால் தற்போது மஹாராஷ்டிர கவர்னராக உள்ள, சி.பி.ராதாகிருஷ்ணன் என்ன ஆவார்?' என்றால், 'அவர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது' என, சொல்லப்படுகிறது.'பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது. அதற்கு முன்பாக, கவர்னர்கள் மாற்றம், புதிய கவர்னர்கள் நியமனம் நடக்கலாம்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisement