தேசிய லோக் அதாலத் 2 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு

சென்னை : மாநிலம் முழுதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில், 631.80 கோடி ரூபாய் மதிப்பிலான, 1 லட்சத்து, 12,561 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அந்த வரிசையில், நாடு முழுதும் நேற்று, லோக் அதாலத் நடந்தது.

இது குறித்து, மாநில சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநில சட்டப்பணி ஆணைக் குழு நிர்வாகத் தலைவரும் நீதிபதியுமான ஆர்.சுப்பிரமணியன் வழிகாட்டுதலில், தமிழகம் முழுதும் லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் பி.பி.பாலாஜி, வி.லட்சுமிநாராயணன், பி.தனபால், எம்.ஜோதிராமன், மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார், கே.கே.ராமகிருஷ்ணன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் எம்.ஜெயபால், பி.கோகுல்தாஸ் என, ஒன்பது அமர்வுகளும், மாவட்டம், தாலுகா அளவில் 499 அமர்வுகளும் அமைக்கப்பட்டன.

இந்த அமர்வுகளில், இரு தரப்பினர்களுடன் நீதிபதிகள் பேச்சு நடத்தியதில், ஒரு லட்சத்து 12,561 வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதன் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, 631 கோடி, 80 லட்சத்து 27,703 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement