புனேயில் இடிந்து விழுந்தது ஆற்றுப்பாலம்: நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

5

புனே: பலத்த மழை மற்றும் நீர் மட்டம் உயர்வால் புனேயில் உள்ள இந்திராயானி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் மீட்கப்பட்டவர்களின் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் தலேகானில் உள்ள குண்ட்மாலா அருகே இந்திராயானி ஆற்றின் மீது நீண்ட நாட்களுக்கு முன்னர் கட்டப்பட்ட பாலம் உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் இங்கு வருவது வழக்கம்.

இன்று ஏராளமானோர் வந்த நிலையில், அந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேர ்நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


சம்பவம் குறித்து அறிந்ததும், போலீசார், மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 15 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன.


இது குறித்து போலீசார் கூறியதாவது: இந்த சம்பவத்தில் சுமார் 15 முதல் 20 பேர் வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாழடைந்த நிலையில் இருந்த பாலம், சிறிது நேரம் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது. இருப்பினும், பலத்த மழை மற்றும் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் காண பலர், இந்த ஆற்றுப்பாலத்தில் ஒரே நேரத்தில் கூடியதால் பாலம் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.


தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் புனேவில் உள்ள இடத்தை அடைந்துள்ளன, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் குழுக்கள் வருவதற்கு முன்பே, உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரும் முதலில் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இதுவரை இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.


பிரதமர் கேட்டறிந்தார்





சைப்ரசில் உள்ள பிரதமர் மோடி, இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.



முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டி:

மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள தலேகாவ் அருகே இந்திராயானி ஆற்றில் பாலம் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும்.இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அவர் கூறினார்.

Advertisement