மதுராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பலி

மதுரா:உ.பி.,மாநிலம் மதுராவில் நெரிசல் மிகுந்த கச்சி சதக் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். அங்கு மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

உ.பி., மாநிலம் மதுரா மாவட்டத்தில் நெரிசல் மிகுந்த பகுதியான கச்சி சதக்கில் இன்று பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த துயரமான சம்பவத்தில் 4 வயதுள்ள இரு குழந்தைகள் உள்ளிட்ட 3பேர் உயிரிழந்தனர்.இடிபாடுகளுக்கு அடியில் வேறு யாரும் புதைந்து உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இது குறித்து மதுரா மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரி பூஷண் வர்மா கூறியதாவது:

.கோவிந்த் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மசானி பகுதியில், மண் சாலையில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் துணைப் பேரிடர் மீட்புப் படை குழுக்கள் விரைந்து வந்தன.தீயணைப்புப் படை மற்றும் மாநகராட்சி குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் குறித்து எண்ணிக்கை தெளிவாக தெரியவில்லை. நாங்கள் இடிந்து விழுந்த இடத்தில் இருக்கிறோம். மருத்துவமனையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உயிர்களைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம்.இதுவரை, ஒருவர் மீட்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார். இன்னும் சிக்கியவர்களைத் தேடி வருகிறோம். அவரது நிலை தற்போது சீராக உள்ளது. இந்த நிலையில், ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே இடிந்து விழுந்ததாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன. விசாரணைகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு பூஷண் வர்மா கூறினார்.

Advertisement