இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும்: அதிபர் டிரம்ப் சூசகம்

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரானும், இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். நான் வர்த்தகத்தை பயன்படுத்தி இரண்டு சிறந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வந்தேன்.
எகிப்து மற்றும் எத்தியோப்பியா இடையே நைல் நதியில் அணைக்காக ஏற்பட்ட சண்டையில் எனது தலையீட்டால் இப்போது அமைதி நிலவுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். அதேபோல், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும்.
இப்போது பல பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் நடக்கின்றன. நான் நிறைய செய்கிறேன். அதனை, மக்கள் புரிந்து கொள்கிறார்கள். மத்திய கிழக்கை மீண்டும் சிறப்பானதாக்குங்கள். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.







