திருப்பூர், நெல்லை அசத்தல் வெற்றி: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்

சேலம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருப்பூர், நெல்லை அணிகள் வெற்றி பெற்றன.
சேலத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருச்சி, திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி கேப்டன் சாய் கிஷோர் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
திருச்சி அணிக்கு சுஜய் (37) நல்ல துவக்கம் கொடுத்தார். அபாரமாக ஆடிய சஞ்சய் யாதவ், 25 பந்தில் அரைசதம் எட்டினார். முகிலேஷ் (23) ஆறுதல் தந்தார். திருச்சி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. திருப்பூர் அணி சார்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட் சாய்த்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய திருப்பூர் அணிக்கு துஷார் ரஹேஜா கைகொடுத்தார். சரவணக் குமார் வீசிய 3வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி விளாசிய ரஹேஜா, செல்வக் குமரன் பந்தை சிக்சருக்கு அனுப்பி, 20 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 80 ரன்னில் (36 பந்து, 6 சிக்சர், 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
பின் இணைந்த பிரதோஷ் ரஞ்சன் பால் (42*), முகமது அலி (25*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. திருப்பூர் அணி 18.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
நெல்லை கலக்கல்மற்றொரு லீக் போட்டியில் சேலம், நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார். சேலம் அணிக்கு ஹரி நிஷாந்த் (50) நல்ல துவக்கம் கொடுத்தார். முகமது (28*) ஆறுதல் தந்தார். சேலம் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன் எடுத்தது. நெல்லை சார்பில் சச்சின் ரதி 5 விக்கெட் சாய்த்தார்.
சுலப இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு சந்தோஷ் குமார் (73) நம்பிக்கை தந்தார். நிர்மல் குமார் (37*), ரித்திக் ஈஸ்வரன் (13*) கைகொடுத்தனர். நெல்லை அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 130 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.