சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணி...புறக்கணிப்பு: 4 மாத ஊதியம் தராததால் பணியாளர்கள் விரக்தி

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு போடும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்காததால், அவர்கள் பணியை புறக்கணித்து வருகின்றனர். ஒரு மாதமாக பணிக்கு செல்லாமல் இருப்பதால், திட்டமிட்ட காலத்திற்குள் பணி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூரு வரை, தங்க நாற்கர சாலை உள்ளது. இதன் வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒஸ்கேட்டே வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், பெங்களூரை அடையலாம்.

இந்த சாலை பணிக்கு, 7,406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில், 3,477 கோடி ரூபாய் கட்டுமான பணிக்கும்; 3,929 கோடி ரூபாய் நில எடுப்பிற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

புதிய அதிவிரைவு சாலைக்கு, 2022, பிப்., மாதம் மண் மாதிரி சேகரிக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் செய்தனர்.

முதற்கட்டமாக, கூத்தவாக்கம் ஏரி, மேல்பொடவூர், மணியாட்சி, கோவிந்தாவடி ஏரி ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

சித்துார் - ராணிப்பேட்டை வரை; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் - காஞ்சிபுரம் வரை; காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வரையில், 105 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நடந்து வருகிறது. மேலும், 76.26 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நிறைவு பெற்றுள்ளன.

இதில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முதல், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் வரையில், கடந்த மார்ச் மாதம் இறுதியில் முடிக்க வேண்டும்.

இப்பணியில், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி, உளியநல்லுார்; காஞ்சிபுரம் மாவட்ட கோவிந்தவாடி, காட்டுப்பட்டூர் ஆகிய ஏரிகளில் பில்லர் போடும் பணி நிறைவு பெற்றுள்ளது. அவற்றை இணைக்கும் பணி முடியவில்லை.

இதை காரணம் காட்டி, பணிக்கான அவகாசத்தை நீட்டித் தருமாறு, பணி ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட அலுவலகத்தில் கேட்டுள்ளது.

இதையடுத்து, அத்துறை பணி காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும், பணி ஒப்பந்த எடுத்த நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால் ஊழியர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கனரக வாகன ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் வேலையை புறக்கணித்து வருகின்றனர்.

ஒப்பந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் தரப்பில், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இருப்பினும், தீர்வு எட்டப்படவில்லை என, தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

விரைவில் சரியாகிவிடும்

பீஹார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, குடும்பங்களை விட்டு விட்டு சாலை விரிவாக்க பணிகள் செய்து வருகிறோம். மாதந்திர ஊதியத்தை நான்கு மாதங்களாக வீட்டிற்கு அனுப்ப முடியவில்லை. நாங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல வேண்டும் என்றாலும், பயண செலவுக்கு பணம் வேண்டும். ஒப்பந்தம் எடுத்த நிறுவன அதிகாரிகளும் விரைவில் சரியாகிவிடும் என, எங்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். அதனால், எப்போது சரியாகிறதோ அப்போது செய்யலாம் என, வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

- தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள்,

அதிவிரைவு சாலை போடும் திட்டம், மகேந்திரவாடி.

எங்களுக்கு தெரியாது

பணி ஒப்பந்த எடுத்த நிறுவனம் செய்திருக்கும் வேலைகளுக்கு ஏற்ப, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் பணம் விடுவித்துள்ளது. ஒப்பந்த நிறுவனம், தொழிலாளர்களுகளுக்கு ஊதியம் வழங்காதது குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரியாது.

சாலை திட்ட அதிகாரிகள்,

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை


பணிகள் முடிந்த விபரம்




திட்டம் மொத்தம் துாரம் முடிக்கப்பட்ட துாரம்சோளிங்கர் காஞ்சிபுரம் 25.5 கி.மீ., 11.25 கி.மீ.,

Advertisement