நாட்டு இன நாய்கள் பாதுகாப்பு மைய கட்டுமான பணி இழுபறி

சென்னை:நாட்டு இன நாய்கள் பாதுகாப்பு மைய கட்டுமான பணிகள் இழுபறியாக உள்ளதாக, குற்றசாட்டு எழுந்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில், ஆறு கோடி ரூபாயில், 11,773 சதுர அடியில், உள் நாட்டு நாய் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது.

இம்மையத்தில், நாட்டு நாய்களான, கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் நாய்களை பாதுகாப்பதோடு, அவை துாங்க, ஓடி விளையாட, இனப்பெருக்கம் செய்ய, தனித் தனி அறைகள் கட்டப்படுகின்றன.

நாட்டு இன நாய்களை இனப்பெருக்கம் செய்து, வெளி சந்தை விலையைவிட, பாதி விலைக்கு குட்டிகளை விற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், குட்டிகளை வாங்கும் நாளை எதிர் நோக்கி, மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இம்மையத்தின் பணிகள் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என, கால்நடை அதிகாரிகள், டாக்டர்கள் கூறினர்.

ஆனால், கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையாமல், இழுபறியாக உள்ளது.

இதுகுறித்து, கால்நடைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை முடித்து தராததால் திறப்பு தள்ளிப்போகிறது' என்றனர்.

கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பெருமளவு பணிகள் முடிந்து விட்டது. விரைவில் ஒப்படைக்கப்படும்' என்றனர்.

இதுகுறித்து, செல்ல பிராணிகள் வளர்ப்போர் கூறியதாவது:

நாட்டு நாய்களை வாங்கி வளர்க்க விரும்புகிறோம். ஆனால், வெளி சந்தையில், அதன் விலை மிக அதிகமாக உள்ளது. இம்மையத்தில் விலை குறைவாக வாங்க முடியும்.

இந்த நாட்டு நாய் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் பயன்பாட்டிற்கு வந்தால், எங்கள் விருப்பம் நிறைவேறும். ஆனால், பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. எப்போது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement