முத்தமிட முயன்றவரின் நாக்கை கடித்த பாம்பு: சமூக வலைதள மோகத்தால் விபரீதம்

5

மோரதாபாத்: உ.பி.,யில் ரீல்ஸ் வீடியோ வெளியிடும் ஆசையில், கொடிய விஷமுள்ள பாம்பிற்கு முத்தமிட முயன்றவரை, அந்தப் பாம்பு கடித்து விட்டது. அவர் இப்போது ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.

உ.பி., மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹபைத்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார் 50, இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சமூக ஊடகத்தில் புகழ் பெற வேண்டும் என்று எண்ணி, ஒரு கொடிய விஷமுள்ள பாம்பை பிடித்து அதனுடன் இருந்தபடி வீடியோ எடுத்து படமாக்கினார்.
இதை அருகில் இருந்தவர்களும் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில் ஜிதேந்திர குமார் பாம்பை தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு மெதுவாக அதன் தலை மீது நாக்கை நீட்டிய போது அவரது நாக்கில் பாம்பு கடித்தது. இதை கண்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கடித்த பிறகு குமாரின் உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மொராதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஐ.சி.யூ.,வில் உள்ள அவரது உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்து கிராமத் தலைவர் ஜெய்கிராத் சிங் கூறியதாவது:

சில தினங்களுக்கு முன் ஒரு சுவரில் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்தது, இதனால் அங்குள்ளவர்கள் பீதி அடைந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த ஜிதேந்திர குமார், பாம்பைப் பிடித்தார்.
அவர் பாம்பை முத்தமிட முயன்றார். ஆனால் அவரது பிடி தளர்ந்ததால், பாம்பு அவரது நாக்கில் கடித்தது. அதிர்ச்சியடைந்த அவர், பாம்பை அருகிலுள்ள புதர்களுக்குள் விட்டார்.

இவ்வாறு ஜெய்கிராத் சிங் கூறினார்.

இது பார்வையாளர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை பெற்றது.

Advertisement