ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

10


சென்னை: ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன், காதலனின் தம்பியான சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு, திருவள்ளூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (14ம் தேதி) சென்றனர். அப்போது, அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் திரண்டு போலீசாருக்கு இடையூறு செய்தனர்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகிவிட்டார். இதனிடையே இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி ஐகோர்ட்டில் முன் ஜாமின் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பூவை ஜெகன் மூர்த்தி மட்டுமின்றி ஆயுதப்படைப்பிரிவு ஏ.டி.ஜி.பி., ஜெயராமிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதும் சந்தேகம் உள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.


இதையடுத்து ஏ.டி.ஜி.பி., ஜெயராம், எம்.எல்.ஏ., ஜெகன் மூர்த்தி இருவரும் இன்று மதியம் 2:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அதன்படி இருவரும் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கிடுக்கிப்பிடி கேள்வி



தொடர்ந்து எம்.எல்.ஏ., பூவை ஜெகன் மூர்த்திக்கு கடுமையான கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

இந்த வழக்கு விசாரணையில், 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்.


விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள். விசாரணைக்கு தனியாக வர வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்யவா உங்களை மக்கள் ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்று நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கு ஜூன் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டநிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


@block_B@யார் இந்த ஜெயராம் போலீஸ்


ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஆக இருக்கும் எச்.எம்.ஜெயராம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். கோவையில் பணியை தொடங்கிய அவர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.பி.,யாகவும், கோவை, வேலுார், தஞ்சையில் டி.ஐ.ஜி., ஆகவும், திருச்சியில் ஐ.ஜி., ஆகவும் பணியாற்றியவர். சென்னை வடக்கு கூடுதல் கமிஷனராகவும், தமிழ்நாடு போலீஸ் அகாடமியிலும் பணியாற்றியவர். block_B

Advertisement