வியாசர்பாடி சாஸ்திரி நகர் மீன் சந்தையால் சாலை கபளீகரம் சுகாதார சீர்கேடால் 40 ஆண்டாக போராட்ட வாழ்க்கை

வியாசர்பாடி, வியாசர்பாடி, 45வது வார்டுக்கு உட்பட்ட சாஸ்திரி நகரில் 17, 18 மற்றும் 19வது தெரு உள்ளது. இப்பகுதியில் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
தற்போது மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மா நாட்டில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு முன் வந்து தமிழர்கள் குடியேறினர்.
அவர்கள், குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த சாலையில், சிறு சிறு கடைகள் வைக்க துவங்கினர். காலப்போக்கில் அத்தெருக்களில் சாலையோரம் அமைக்கப்பட்ட மீன் கடைகள் நிரந்தரமானதுடன், சாலையும் கபளீகரம் செய்யப்பட்டு விட்டது. இதனால், 25 அடி கொண்ட சாலை, தற்போது 5 அடியாக சுருங்கியது.
தற்போது, 50க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இந்த கடைகளால், சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றத்தாலும், சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டாலும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, சாஸ்திரி நகர் மக்கள் கூறியதாவது:
தற்போது மீன் விற்பனை செய்யும் இடம், மீன் கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் இல்லை; குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட இடமாகும்.
மீன் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், தெருக்களில் வழிந்தோடி கடும் துர்நாற்றத்தை வீசி வருகிறது.
இது, சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்களுக்கு சுகாதார சீர்கேட்டையும், உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
கடந்த 1983ம் ஆண்டின் நில வரைபடத்தின்படி, அப்பகுதி தெருக்களை அளந்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். இது குறித்து, சென்னை கலெக்டருக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இனியாவது சென்னை கலெக்டர், குடியிருப்புவாசிகளின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழக்கு தொடருவோம்
இது குறித்து, பர்மா தமிழர் முன்னேற்ற சங்கத்தினர் கூறியதாவது:
சாலையை ஆக்கிரமித்து, எங்களுக்கு இடையூறாக சுகாதாரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை அகற்றக்கோரி, பர்மா தமிழர் முன்னேற்ற சங்கம், சமூக ஆர்வலர்கள் சார்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, முதல்வர் தனிப்பிரிவு, தலைமை செயலர், மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், 100க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்துள்ளோம்.
ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்கனவே, சாஸ்திரி நகரில் நவீன மீன் அங்காடி வளாகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் மேற்கொண்டு வருகிறார்.
இதனால், 40 ஆண்டு கால மக்கள் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மீன் அங்காடி வளாகத்தில், பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொண்டால், நாங்கள் வழக்கு தொடருவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வியாசர்பாடி, சாஸ்திரி நகர், 17வது, 18வது தெரு மற்றும் 19வது தெருக்களில் மீன் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 19வது தெருவில் அரசு மழலையர் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்கின்றனர். பள்ளிக்குள் நுழைய முடியாத அளவிற்கு, மீன் கூடைகளை அடுக்கி வைப்பதால், குழந்தைகள் மூக்கை மூடிக் கொண்டு வகுப்புகளுக்குள் செல்லும் நிலை உள்ளது.
பள்ளிக்கு அருகே உள்ள மீன் கடைகளால், குழந்தைகளின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அடிக்கடி குழந்தைகளுக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. இதனால், அதிகளவிலான குழந்தைகள் பாதியிலேயே பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டனர்.
நவீன மீன் அங்காடி
திட்டம் என்னாச்சு?
கடந்த 2012ல் வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 16வது தெருவில், 5 கிரவுண்ட் இடத்தில் நவீன மீன் அங்காடி வளாகம் அமைக்க, 89.60 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், முதற்கட்ட பணி கூட துவக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நவீன மீன் வளாக அங்காடி அமைவதன் மூலம், சாஸ்திரி நகர் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரை புதிய மீன் சந்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும்
-
சிவகாசி ரயில்வே பீடர் ரோட்டில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
-
துணை முதல்வர் உதயநிதி இன்று சிவகங்கை வருகையால் தீராத பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்ப்பு
-
காரியாபட்டி வடகரையில் சேதமான மேல்நிலை தொட்டியால் விபத்து அச்சம்
-
குழாய் வழியாக கிருஷ்ணா நீர் கைவிட்டதற்கு பன்னீர் கண்டனம்
-
'பொதுச்செயலர் பதவியையும் இழந்து நிற்பார் பழனிசாமி'
-
பழனி, சமயபுரத்தில் இடைநிறுத்த தரிசன முறையை கைவிட வேண்டும்: ஹிந்து தமிழர் கட்சி