கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் 5 பேருக்கு செயற்கை கால் பொருத்தம்

கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஐந்து பேருக்கு, 4 லட்சம் ரூபாய் மதிப்பில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதிநவீன செயற்கை கால்கள் ஜெர்மன் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்யேகமாக, வழக்கமான செயற்கை கால்களை விட, எடை குறைவாக உள்ளபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் சுதந்திரமாகவும், நம்பிக்கையுடனும் நடக்க உதவுகிறது. கடந்த ஏப்., 2024 முதல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், செயற்கை கால்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 25 நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் துறை, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் கால்கள் வழங்கப்பட்டுள்ளன. முட்டிக்கு கீழும், கால் முட்டிக்கு மேலும் கால் அகற்றப்பட்டவர்கள், விபத்து அல்லது சர்க்கரை நோய், ரத்த குழாய் நோய் பாதிப்பு


தீவிரமடைந்ததால் கால் நீக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். முதல்வர் விரிவான காப்பீடு திட்ட அட்டை உள்ள பயனாளிகள், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் பதிவு செய்து, இந்த சேவையை இலவசமாக பெறலாம்.
இத்தகவலை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் லோகநாயகி தெரிவித்துள்ளார்.

Advertisement