டில்லி -ராஞ்சி விமானத்தில் கோளாறு: புறப்பட்ட இடத்திற்கு திரும்பியது

புதுடில்லி:டில்லியிலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீண்டும் டில்லிக்கு திரும்பியது.

ஏ.ஐ. 9695 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலை 4:25 மணிக்குப் புறப்பட்டு, மாலை 6:20 மணிக்கு ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. டில்லியில் இருந்து ராஞ்சிக்குச் சென்று கொண்டிருந்த விமானம், நடுவானில் செல்லும்போது தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்காரணமாக மீண்டும் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் டில்லி திரும்பியது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

எங்கள் விமானங்களில் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால், புறப்பட்ட விமானம் மீண்டும் டில்லிக்குத் திரும்பியது. அதன்பிறகு விமானத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து விமானம் திட்டமிட்டபடி நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement