கிடப்பில் தலைமை மருத்துவமனை கட்டுமான பணி; இட நெருக்கடியால் டாக்டர்கள், நோயாளிகள் அவதி

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணி நிறைவடையாததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்தாலும், விழுப்புரம் மாவட்ட பகுதி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களின் ஒரே சிகிச்சை மையமாக இது உள்ளது.

இதனை உணர்ந்த தமிழக அரசு, மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவித்தது.

இதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் 54 கோடி ரூபாய் மதிப்பில், 6 தளங்களுடன், 2 பிளாக்குகளாக மருத்துவமனை கட்ட திட்டம் வகுக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது.

ஒப்பந்ததாரர் பணியை காலம் கடத்தி துவங்கிய நிலையில், 18 மாதங்களில் பணி முடித்தாக வேண்டும். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் பணி நிறைவடைந்திருக்க வேண்டும். ஒப்பந்த காலம் நிறைவடைந்து ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் வெள்ளை பூச்சுடன் அப்படியே நிற்கிறது.

இன்னும் 30 சதவீத முக்கிய பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக இட நெருக்கடி ஏற்பட்டு புறநோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் உள் நோயாளிகளுக்கு படுக்கை வசதி, டாக்டர்களுக்கான பார்வையாளர் அறை என எதுவும் இல்லை.

இருக்கும் ஒரு கட்டடத்தில் புறநோயாளிகள் சிகிச்சை, மேல் தளத்தில் பிரசவ வார்டு, இரண்டாவது தளத்தில் ஆப்பரேஷன் தியேட்டர் என எப்போது பார்த்தாலும் கட்டடம் முழுதும் நோயாளிகள் நிரம்பி வழிவதை காண முடிகிறது.

நோயாளிகளும், டாக்டர்களும் போதிய இடவசதி இன்றி அசுத்தமான சூழ்நிலையில் அல்லோலப்படும் அவலம் உள்ளது. திருக்கோவிலுாரைச் சுற்றி இருக்கும் 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் உயிர் காக்கும் ஒரே மருத்துவமனையாக இருப்பதால் கிடப்பில் போடப்பட்டுள்ள கட்டட பணியை துவக்கி விரைந்து முடித்து, மருத்துவமனையை செயல்பாட்டிற்கு கொண்டுவர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement