மது போதை தகராறு: கட்டுமான தொழிலாளி அடித்துக் கொலை

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் மது போதையில் நடந்த தகராறில் கம்பியால் அடித்து கட்டுமானத்தொழிலாளி இளங்கோவனை 41, கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே தேரிருவேலி இளங்கோவன் கட்டுமானத்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன் தினம் இரவு ஊருக்கு செல்ல மதுரை ரோட்டில் உள்ள சோழா ஓட்டல் அருகே வந்துள்ளார். அங்கு மது போதையில் ஒருவர் தகராறு செய்து கொண்டிருந்தார்.

அவரை மது போதையில் இருந்த இளங்கோவனும் தட்டிக்கேட்டு தன் செருப்பால் அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த போதை நபர் இளங்கோவனை கம்பியால் தலையில் அடித்துள்ளார். இதில் காயமடைந்த இளங்கோவனை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இளங்கோவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணையில் இளங்கோவனுடன் தகராறு செய்து தாக்கியது உத்தரகோசமங்கை அருகே நல்லாங்குடி பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி 38, என தெரிந்தது. அவரை ராமநாதபுரம் பஜார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement