'பைக் டாக்சி' தடை அமல் 103 வாகனங்கள் பறிமுதல்

பெங்களூரு : ஜூன் 16ம் தேதி முதல் பைக் டாக்சிக்கு தடை இருந்தும், முறைகேடாக இயங்கி வந்த 103 பைக்குகளை, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு உட்பட கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஜூன் 15ம் தேதி வரை இயக்க, அரசிடம், பைக் டாக்சி நிறுவனங்கள் அனுமதி கேட்டிருந்தன. அதேவேளையில், அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனுவையும், கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், நேற்று முதல் பைக் டாக்சிகளுக்கு முழு தடை விதிக்கப்பட்டது. இதையும் மீறி, பெங்களூரு நகரில் நேற்று பைக் டாக்சிகள் சுற்றித் திரிந்தன.

இது குறித்து, ஆர்.டி.ஓ., கூடுதல் கமிஷனர் மல்லிகார்ஜுனா கூறுகையில், ''முதல் நாளான இன்று (நேற்று) முறைகேடாக இயங்கி வந்த 103 பைக் டாக்சிகளை பறிமுதல் செய்து உள்ளோம்.

வெள்ளை நிற போர்டு வைத்துள்ள பைக்குகளை, வர்த்தகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. அதுபோன்று வெள்ளை நிற போர்டு வைத்துள்ள கார்களும், வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தக் கூடாது,'' என்றார்.

Advertisement