மது அருந்தி பள்ளி வாகனம் இயக்கிய 58 ஓட்டுநர்கள் மீது வழக்கு

பெங்களூரு : பணியின்போது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக, பெங்களூரின் 58 தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் பள்ளி வாகன ஓட்டுநர்கள், மது போதையில் வாகனம் ஓட்டுவதாக போக்குவரத்து போலீசாருக்கு பல புகார்கள் வந்தன. நேற்று பல பகுதிகளில் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை, போக்குவரத்து போலீசார், பள்ளி வாகனங்களை சோதனையிட்டனர்.

மொத்தம், 4,559 பள்ளி வாகன ஓட்டுநர்கள் சோதனையிடப்பட்டனர். இந்த சோதனையில், 58 ஓட்டுநர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டது. இவர்கள் மீது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இத்தகவல், பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எடுத்துச் செல்ல, மாற்று ஓட்டுநர்களுடன் நிர்வாகிகள் வந்தனர். மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய, ஆர்.டி.ஓ.,வுக்கு போலீசார் கடிதம் எழுத உள்ளனர்.

Advertisement