கால்நடை கொட்டகைக்கு நிதி இழுபறி பஞ்., ஆபீசில் எருதை கட்டிய விவசாயி

பெலகாவி : பெலகாவி மாவட்டம், அதானியின் சம்பர்கி கிராமத்தை சேர்ந்தவர் விவசாய சதீஷ் கோலி. கடந்தாண்டு கால்நடை கொட்டகை கட்ட, கிராம பஞ்சாயத்து, சதீஷ் கோலிக்கு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, பலரிடம் கடன் வாங்கி, வீட்டின் அருகில் கால்நடை கொட்டகை கட்டிக் கொண்டார். ஆனால் நிதி வரவில்லை. பலமுறை முறை கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கோபமடைந்த அவர், நேற்று காலை தன் எருமை மாட்டுடன், கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஜன்னல் கம்பியில் மாட்டை கட்டிப் போட்டு, தீவனம் அளித்தார். தகவல் அறிந்த அதானி தாலுகா கிராம பஞ்சாயத்து உயர் அதிகாரிகள், அங்கு வந்தனர்.

அவர்களிடம் விவசாயி சதீஷ் கோலி கூறியதாவது:

விவசாயிகள் பயனளிக்கும் பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. கால்நடை கொட்டகை கட்டிக் கொள்ள, எனக்கு அனுமதி அளித்துள்ளது என்று, கடந்தாண்டு சம்பர்கி கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுமான பணிகள் முடிந்து ஓராண்டாகியும் இன்னும் நிதி கிடைக்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், 'உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட திட்டம் ரத்து செய்யப்பட்டது' என்கின்றனர்.

கட்டுமானத்தின்போது பொறியாளர் வந்து புகைப்படம் எடுத்தார். கடன் கொடுத்தவர்கள் இப்போது எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

எங்கிருந்து எனக்கு பணம் கிடைக்கும்? அதிகாரிகள் உடனடியாக பணத்தை விடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அதானி தாலுகா பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சிவானந்த் கவுலாபூர் அளித்த பேட்டி:

கடந்தாண்டு சம்பர்கி கிராம பஞ்சாயத்து விவசாயிக்கு, கால்நடை கொட்டகை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், பணியில் சிறிய குழப்பம் ஏற்பட்டது. அதை சரி செய்ய, பொறியாளர் அறிவுறுத்தினார். அவர் இதுவரை சரி செய்யவில்லை. இதன் காரணமாகவே, பணம் ஒதுக்கீடு தடைபட்டது.

இன்று விவசாயிகள் முன்னிலையில் அந்த பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. விவசாயிகளை சமாதானப்படுத்திய பின், எருதை அழைத்துச் சென்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement