மாங்காய்களை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

குடியாத்தம்; வேலுார் மாவட்டம், காட்பாடி, குடியாத்தம் பகுதிகளில் இந்தாண்டு மாங்காய் விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில், நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் மாங்காய் ஆண்டுதோறும், அருகாமையில் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் மாம்பழ ஜூஸ் கம்பெனிகளுக்கு விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.

இந்தாண்டு தமிழக மாங்காய்களை, ஆந்திராவில் வாங்க மறுக்கின்றனர். மேலும், தமிழக வாகனங்களை தடுத்து, திருப்பி அனுப்புகின்றனர். இந்நிலையில், நேற்று வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமியில், ஆந்திரா செல்லும் சாலையில், மாங்காய்களை கொட்டி, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, ஆந்திர எல்லையில், தமிழக மாங்காய்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதை தடுக்க வேண்டும். ஆந்திர அரசு, அப்பகுதி, 'மா' விவசாயிகளுக்கு அளித்த மானிய தொகை போல், தமிழக அரசும், ஒரு டன்னுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும்.

தமிழக மாம்பழ ஜூஸ் கம்பெனிகள், ஒரு டன் மாங்காயை, 6,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும். நிரந்தர தீர்வாக, 'மா'வுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக, ஒரு டன்னுக்கு, 15,000 ரூபாயை, தமிழக அரசு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement