ரேஷன் கடைகளில் மூடை மூடையாக பொருட்கள் இருந்தும் 'சர்வர்' பிரச்னையால் பொருட்கள் பெற முடியாமல் தவிப்பு

தேனி; மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னையால் பொருட்கள் வினியோகம் சுமார் 50 சதவீத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாங்கி செல்ல முடியாமல் தவிப்பிற்கு ஆளாகுகின்றனர்.

மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 513, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 29 என மொத்தம் 542 கடைகள் உள்ளன. மாவட்டத்தில் 4.31 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. ரேஷன் கார்டு தாரர்களுக்கு அட்டையின் வகையை பொருத்து அரிசி, சீனி, துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்டவை வினியோகம் செய்யப்படுகிறது. தோராயமாக மாதந்தோறும் அரிசி 523 டன், கோதுமை 192 டன், சீனி 400 டன், துவரம் பருப்பு 300 டன், பாமாயில் 3லட்சம் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் போது ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களின் கைரேகை அல்லது கருவிழி பதிவு செய்து பின் வழங்கப்படுகிறது. தற்போது எடை குறைவு ஏற்படுவதை தவிர்க்க பில் வழங்கும் இயந்திரம் 'புளூடூத்' மூலம் மின்னனு தராசுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த முறை அனைத்து ரேஷன் கடைகளிலும் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆனால் தற்போது பல இடங்களில் சர்வர் பிரச்னையால் பொருட்கள் வினியோகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் முடங்கி உள்ளது. கடையில் பொருட்கள் இருந்தாலும் அதனை பொதுமக்கள் வாங்கி செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

இதுபற்றி ரேஷன்கடை விற்பனையாளர்கள் சிலர் கூறுகையில், 'சர்வர் பிரச்னை கடந்த 4 தினங்களாக நீடிக்கிறது. பிரச்னை தீர அதிகாரிகளிடம் கூறியும் தெளிவான விளக்கம் இல்லை. உதாரணமாக 100 பேருக்கு பொருட்கள் வழங்கி வந்த சூழலில் தற்போது 30 பேருக்கு கூட முழுமையாக வழங்க முடியவில்லை. அரசு விரைந்து தீர்வு காண வேண்டும், என்றனர்.

பணியாளர்களுக்கு பயிற்சி



:

இதுபற்றி கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொருட்கள் வழங்க பயன்படுத்தும் விற்பனை முனையம் இயந்திரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எளிமையாக பொருட்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு இன்று(ஜூன் 17) கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி வழங்க உள்ளோம். பயிற்சி வழங்க பொறியாளர்கள் வருகை தர உள்ளனர், என்றனர்.

Advertisement