ரூ.1,500 கோடி மோசடி விவகாரத்தில் 154 பேரிடம் அசல் ஆவணம் பெற்ற சி.பி.ஐ.,

ஈரோடு, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை தலைமையிடமாக கொண்டு, பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட் நிறுவனம், 2008ல் தொடங்கப்பட்டு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளை நிறுவியது. முதலீடு செய்யும் பணத்துக்கு ஆறு ஆண்டுகளில் இரட்டிப்பாக தருவதாக ஆசை வார்த்தை கூறினர். அதே நிறுவனம் பி.டி.ஏ., அறக்கட்டளை பெயரில், மக்களிடம் வைப்பு தொகை பெற்று இரட்டிப்பாக தருவதாகவும் பணம் வசூலித்தது. முதிர்வு அடைந்தும் பணத்தை வழங்காமல் தலைமறைவாகினர்.


இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், 2015ல் அளித்த புகாரின்பேரில், தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பல லட்சம் பேரிடம், 1,500 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது உறுதியானது. வழக்கும் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பரிவார் டைய்ரீஸ், பி.டி.ஏ., அறக்கட்டளையில் முதலீடு மற்றும் டெபாசிட் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களிடம் அசல் ஆவணங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு மாவட்டமாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து, அசல் ஆவணங்களை பெற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு காளைமாட்டு சிலை அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்துக்கு, 154 பேரை நேற்று வரவழைத்தனர். ஒவ்வொருவராக விசாரணை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்று பதிவு செய்து கொண்டனர்.

Advertisement