போராட்டத்தில் ஈடுபடும் காஸ் பிளான்ட் தொழிலாளர்களை பணிக்கு அழைக்க முடிவு

ஓமலுார், 'காஸ்பிளான்ட் நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு அழைத்து கொள்ள வேண்டும்' என, முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் அருகே கருப்பூரில், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் காஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலை செயல்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன், ஆலையில் ஒப்பந்த அடிப்படியில் பணியாற்றி வரும், இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட, 10 பேரையும் பணியிலிருந்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

பணி நீக்கம் செய்தவர்களை, மீண்டும் பணியில் சேர்க்க கோரி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஐந்தாவது நாளாக போராட்டம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு ஆலை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆலையில் காஸ் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், தொழிலாளர் சங்கம், ஆலை நிர்வாகம், சேலம் தொழிலாளர்துறை அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஆலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் ஒப்பந்தம் எடுத்துள்ள மீனா காஸ் நிர்வாகிகள், இருதரப்பும் பேசி சமரசம் செய்து கொண்டு, தொழிலாளர்களை பணிக்கு அழைத்துக் கொள்ள வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.


போராட்டத்துக்கு காரணமான, இரு தொழிலாளர்களை மட்டும் மீண்டும் பணிக்கு சேர்ப்பது குறித்து வரும், 26ம் தேதி சென்னையில் இந்திய ஆயின் கார்ப்பரேஷன் சார்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு பின் முடிவு தெரியவரும் என, தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆலை நிர்வாகம், 10 பேரை அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement