99 உடல்கள் அடையாளம் தெரிந்தன

ஆமதாபாத் : குஜராத்தின், ஆமதாபாத் ஏர் - இந்தியா விமான விபத்தில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகியும், சிதைந்தும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக, டி.என்.ஏ., எனப்படும் மரபணு மாதிரி எடுக்கப்பட்டது.

விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் மருத்துவக் கல்லுாரி விடுதியில் இருந்தவர்கள் என, 250 பேரின் உறவினர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இதில், 99 பேரின் உடல்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், 64 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ன.

'வாய்ஸ் ரெக்கார்டர்' மீட்பு



விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து எப்.டி.ஆர்., எனப்படும், விமானத் தரவு ரெக்கார்டர் மீட்கப்பட்டதாக விமான விபத்து புலனாய்வு பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில், 'காக்பிட்' எனப்படும், விமானி அறையில் இருந்த, 'வாய்ஸ் ரெக்கார்டர்' கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதை அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர்.

இதில், விபத்திற்கு முன் விமானி மற்றும் துணை விமானியின் குரல் பதிவாகி இருக்கும் என்பதால், விபத்திற்கான காரணத்தை துல்லியமாக அறியமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement