நான்கு வழிச்சாலை பால பணிகளை விரைவுபடுத்துவது அவசியம்! நிதி ஒதுக்கியும் ஆமை வேகத்தில் நடப்பதால் பாதிப்பு

விருதுநகரில் புல்லலக்கோட்டை வடமலைகுறிச்சி, சூலக்கரைமேடு ஜங்ஷன், கலெக்டர் அலுவலக ஜங்ஷன், படந்தால் ஜங்ஷன், விருதுநகர் மாவட்ட அரசு கலைக் கல்லுாரி ஜங்ஷன் பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை.

குறிப்பாக கலெக்டர் அலுவலகம், சாத்துார் படந்தால், பட்டம்புதுார் பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வந்தது. நான்கு வழிச்சாலையை கடந்து செல்லும் வாகனங்களும் நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களும் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதை தொடர்ந்து சாத்துார் படந்தால் ஜங்ஷன், கலெக்டர் அலுவலகம் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் பாலம் கட்டுவது குறித்து வாக்குறுதிகள் அளித்து தேர்தலில் ஓட்டு சேகரித்தனர்.

பல்வேறு கட்டங்களில் நடந்த போராட்டத்தை தொடர்ந்தும் கட்சியினரின் அழுத்தத்தாலும் தற்போது நான்கு வழிச்சாலையில் கலெக்டர் அலுவலகம், சாத்துார் படந்தால் ஜங்ஷன் பகுதிகளில் பால பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.

இதில் கலெக்டர் அலுவலகம் ஜங்ஷன், படந்தால் ஜங்ஷன் பகுதியில் தற்போது பணிகள் நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி பகுதியிலும் புல்லலக்கோட்டை வடமலை குறிச்சி ஜங்ஷன் பகுதியிலும், பட்டம் புதுார் ஜங்ஷன் பகுதியிலும் சர்வீஸ் ரோடு, உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்படவில்லை.

எனவே இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியிலும் பாலப் பணிகளை துவங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது பாலம் கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வரும் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சாத்துார் எட்டூர்வட்டம் டோல்கேட் நிர்வாக அலுவலர் பாபு கூறியதாவது: கலெக்டர் அலுவலகம் முன்பும், படந்தால் ஐங்ஷன் பகுதியில் பாலப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் சர்வீஸ் ரோடு விரைவில் அமைக்கப்படவுள்ளது.

தற்போது ஒரே கட்டத்தில் பணிகளை செய்வதற்கு வசதியாக போதுமான இடவசதி இல்லை. இதனால் பகுதி பகுதியாக இந்த பணி செய்து முடிக்கப்படும், என்றார்.

Advertisement